Wednesday, December 31, 2008

பாடல் -9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன் மாதவன் வைகுந்த' னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

பொருள்:

தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் அரியவும், அகில் முதலியவற்றின் புகை மணக்கவும், தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகளை இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை; ஆதலால் அவள் தாயை அழைத்து, அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்.) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்குப் பதிலே சொல்லாதலால் ஊமையோ? அல்லது (Kஏளாத_ செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டுக் கிடக்கிறாளோ? "மாமாயனே! மாதவனே! வைகுந்தனே!" என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை; அவளை எழுப்ப மாட்டீர்களா?

பாடல் -8

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் ப்றைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

பொருள்:

மனம்கிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிதுநேரம் விடுதலை பெற்று மேய்வதற்க்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற்குப் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப் போக விடாமல் நிறுத்திவைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்துவா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கம்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கள் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், "ஆ" என்று வாய் திறந்து இரக்கம் காட்டி "வா" என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.

பாடல் -7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

பொருள்:

துயிலும் பெண்ணே! "கீசி கீசு" என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசின. அந்தப் பேச்சின் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? மணம் பொருந்திய கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத் தாலியும், ஆமைத்தாலியும் "கலகல" என்று ஒலிக்க, கைகளை அசைத்து, மத்தினால் கடைந்து ஒசைப்படுத்தும் தயிரின் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனாகிய மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடுகின்றோம்; நீ கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயோ? ஒளியுடையவலே! கதவைத்திற!

Sunday, December 21, 2008

பாடல் -6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இதோ, பறவைகள் குரலெழுப்பத் தொடங்கி விட்டன, இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட நம் நாயகனின் கோயிலில் ஊதுகின்ற வெண்சங்கின் பேரொலி உன் காதில் விழவில்லையா? பேய் மகளான பூதனை தனது தனத்தில் தடவி வந்த நஞ்சை அவள் உயிருடன் உறிஞ்சிக் குடித்தவனும், கள்ளத்தனமாக கடும் வேகத்தில் வந்த வண்டி உடைந்து சிதையுமாறு உதைத்தவனும், திருப்பாற்கடலில் அறிதுயில் கொண்டிருப்பவனுமாகிய நாராயணனை உள்ளத்தில் எண்ணி தியானம் செய்யும் ரிஷிகளும் யோகிகளும் மெதுவாக எழுந்து 'ஹரி ஹரி' என்று கூறும் ஒலி உனது உள்ளத்தில் புகுந்து குளிரவில்லையா? இனியாவது எழுந்திரு.

பாடல் -5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்:

மாயச் செயல்களைச் செய்தவனும் வடமதுரையில் அவதரித்தவனும் யமுனைக் கரையில் வசிப்பவனும் கோகுலத்தில் தோன்றிய சோதியும் பெற்ற வயிற்றுக்குத் தன் பிறப்பினால் பெருமை உண்டாக்கியவனும் ஆகிய கண்ணபிரானை நாங்கள் தூய்மையுடன் வந்து மலர்களைத் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனமாரத் தியானித்தால் செய்த பாவங்களும் செய்யப்போகின்ற பாவங்களும் தீயில் இட்ட தூசு போல எரிந்து மறைந்துவிடும். எனவே அவனது திருநாமங்களைச் சொல்வாய்.

பாடல் -4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

கடல் போன்று கம்பீரமான மழைக்கு உரிய அண்ணலே! எதையும் நீ மறைக்காதே. கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகயத்திலேறி, காலம் முதலான எல்லாவற்றிற்கும் முதற்காரணனான எம்பெருமானுடைய திருமேனி போல் கறுத்து, வலிமை பொருந்திய அழகிய தோள்களைக் கொண்ட அவனது கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, வலம்புரிச் சங்கு போல முழங்கி, சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து கிளம்பும் அம்பு மழை போல, உலகினர்க்கு வாழ்வளிக்கவும் நாங்கள் மார்கழி நீராடவும் விரைவில் பெய்வாயாக!

Thursday, December 18, 2008

பாடல் -3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்ந லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

ஓங்கி வளர்ந்து உலகங்களைத் தம் திருவடியால் அளந்த (நினைக்க: மகாபலி சக்ரவர்த்தி கதை... வாமன அவதாரம்) ஸ்ரீமன் நாராயணின் திருநாமங்களைப் பாடி பாவை நோன்பிற்காக நாங்கள் நீராடினால், நாடு முழுவதும் எந்தவிதத் தீங்கும் இல்லாமல் மாதம் மூன்று மழை பெய்யும் அதனால் உயர்ந்து வளர்ந்து விளங்கும் செந்நெற் பயிற்களின் ஊடே தண்ணீர் மிகுதியால் கயல்மீன்கள் துள்ளும்; அழகிய குவளை மலர்களில் வண்டுகள் உறங்கும்; கறப்பவர்கள் மடிகளைப் பற்றி இழுக்க, பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். இப்படியாக நீர்வளம், நிலவளம் மற்றும் பால்வளம் மிகுந்து அழிவற்ற செல்வம் நிறையும்.