Sunday, December 21, 2008

பாடல் -6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இதோ, பறவைகள் குரலெழுப்பத் தொடங்கி விட்டன, இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட நம் நாயகனின் கோயிலில் ஊதுகின்ற வெண்சங்கின் பேரொலி உன் காதில் விழவில்லையா? பேய் மகளான பூதனை தனது தனத்தில் தடவி வந்த நஞ்சை அவள் உயிருடன் உறிஞ்சிக் குடித்தவனும், கள்ளத்தனமாக கடும் வேகத்தில் வந்த வண்டி உடைந்து சிதையுமாறு உதைத்தவனும், திருப்பாற்கடலில் அறிதுயில் கொண்டிருப்பவனுமாகிய நாராயணனை உள்ளத்தில் எண்ணி தியானம் செய்யும் ரிஷிகளும் யோகிகளும் மெதுவாக எழுந்து 'ஹரி ஹரி' என்று கூறும் ஒலி உனது உள்ளத்தில் புகுந்து குளிரவில்லையா? இனியாவது எழுந்திரு.

No comments:

Post a Comment